10ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற 10ம் தேதி கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் 10 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 10ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
திருக்குறள் படித்த பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சோமசுந்தரம், விஜேந்திரய்யா, ஈஸ்வரன், தவசி, தங்கவேலு ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படும். இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
பின்னர் கேள்வி நேரம் தொடங்கும். பின்னர் தமிழக மதிப்புக் கூட்டு வரி, புறநகர போலீஸ் ஆணையரகம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.
அவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை ராஜினாமா செய்து விட்டாரா என்ற கேள்விக்கு, பத்திரிக்கையி்தான் படித்தேன். இதுவரை ராஜினாமா கடிதம் வரவி்ல்லை என்றார் ஆவுடையப்பன்.
அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதுவும் தரப்படவில்லை என்று தெரிவித்த ஆவுடையப்பன், துணை சபாநாயகரிடமும் அதுபோல எந்தக் கடிதமும் தரப்படவில்லை என்றார்.
சட்டசபையில் 10 உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த சபாநாயகர், குளிர்காலக் கூட்டத் தொடர் சுமூகமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பல்வேறு சூடான பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடரை சந்திக்கவுள்ளதால், குளிர்காலக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications