இலங்கை: மத்திய அரசு வெறும் பார்வையாளரா-சிபிஐ
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு வெறும் பார்வையாளராக இருக்க கூடாது என்று டி.ராஜா கூறினார்.
ரஷ்யாவில் ஜார் மன்னர்களுக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சி வென்றதை நினைவுகூறும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.
தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கொடியேற்றினார்.
மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கிய இந்த விழாவில், நிருபர்களிடம் ராஜா பேசுகையி்ல்,
அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ பொருளாதாரம் இன்று மரணப் படுக்கையில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற போராடுகிறார்கள். முதலாளித்துவத்தை பிரதமர் மன்மோகன் சிங்காலோ, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தாலோ காப்பாற்ற முடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றும் கொள்கைகள் பிற்போக்காக உள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகள் திவாலாகி வருகின்றன.
ஆனால் ப.சிதம்பரமோ பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்க முனைந்து வருகிறார்.
பங்கு சந்தையில் திவாலான தனியாரை காப்பாற்ற மக்கள் பணத்தை செலவழிக்க திட்டம் போட்டுள்ளனர் பிரதமரும் சிதம்பரமும்.
இலங்கையில் சம உரிமைக்காக தமிழர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளாமல் சிங்கள அரசு ராணுவத் தாக்குதல் நடத்துகிறது. போர் நடந்து வருவதால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாகிவிட்டனர்.
அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அரசியல்ரீதியான தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் வெறும் பார்வையாளராக இருக்க கூடாது. அரசியல் தீர்வு காண இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள் சமூக சமத்துவமாக வாழ வழி செய்ய வேண்டும்.
இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படும் வரை இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும்.
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா வெற்றி பெற்றது வரலாற்று சாதனை. மாற்றம்' என்பதுதான் அவருடைய தேர்தல் பிரசாரமாக இருந்தது. அவர் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜார்ஜ் புஷ் பின்பற்றிய யுத்தம், ஆக்கிரமிப்பு, வளரும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒபாமா எப்படிப்பட்ட மாற்றம் கொண்டு வருகிறார் என்று பார்ப்போம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய மந்திரி ஆ.ராசாவின் அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லை. பல கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்து ஆழமான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications