மதிமுக எம்.எல்.ஏ. இளவரசன் மரணம்
மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதி சட்டசபை மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் இன்று மதுரையில் மரணமடைந்தார்.
மதுரை திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீர. இளவரசன். 47 வயதான அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் இன்று காலை பத்தரை மணியளவில் வீர. இளவரசன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து கைதானவர் வீர. இளவரசன்.
வைகோ கைதாக காரணமான திருமங்கலம் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரும் இளவரசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த வீர. இளவரசனுக்கு மாணிக்கவள்ளி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
வைகோவின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக விளங்கியவர் வீர. இளவரசன். திமுகவிலிருந்து வைகோ பிரிந்து மதிமுகவைத் தொடங்கியபோது வீர. இளவரசன் அதில் இணைந்தார். தொடர்ந்து தீவிரமாக மதிமுகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மதுரை மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீர. இளவரசன் 1960ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி பிறந்தார்.
வீர. இளவரசனின் உடலை இன்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வைகோ மற்றும் மதிமுக தலைவர்கள், தொண்டர்கள் திரளாக சென்று பெற்றுக் கொண்டனர்.
இறுதிச் சடங்குக்காக உடல், பள்ளப்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
3 நாள் துக்கம்:
வீர. இளவரசன் மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும். கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications