ஊழல் திமுக எப்படி இலங்கைத் தமிழர்களை காக்கும்?-விஜயகாந்த்

அதே போல ஒன்றும் தெரியாதவர்போல் ஊர் ஊருக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் ஜெயலலிதா, அவரது ஆட்சியில் ஒழுங்காக மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வந்தாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 14ம் தேதி முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அரசு போரை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை அரசின் சிறப்பு தூதரை சந்தித்த பிறகு முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அதன் பிறகு மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று கருணாநிதி தன்னிச்சையாக அறிவித்தார்.
போர் நிறுத்தம் பற்றி இந்திய அரசு எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் முதல்வர் கருணாநிதி மட்டும் தனது வீட்டில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து விட்டு, அனைத்து கட்சியினரின் தீர்மானத்தை கைவிடலாமா?.
பிரணாப் முகர்ஜியை அனைத்து கட்சியினரும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய பிறகு எந்த முடிவானாலும் எடுத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் மட்டுமல்ல, திமுகவின் தோழமைக் கட்சிகளும் இலங்கையில் போர் நிறுத்தம் தேவை என்பதை வற்புறுத்தி வருகின்றன. போர் நிறுத்தம் செய்யாமல் இலங்கை தமிழர்களுக்கு வெறும் மனிதாபிமான உதவிகளை மட்டும் செய்வது பலனளிக்காது. அதுவும் காலம் கடந்து இம்மாத இறுதியில் தான் அந்த உதவிகள் போய் சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் நலன்காக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபடுவதில் அர்த்தமுண்டு. ஆனால் எது சரி என்று முதல்வரால் அனைத்து கட்சி கூட்டத்தில் சொல்லப்பட்டதோ அதையே கைவிடுவதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்புதர வேண்டும் என்று கேட்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, வேதனைக்கும் உரியதாகும்.
இந்திய அரசில் உள்ள திமுக அமைச்சரின் தொலைபேசித்துறையில் சுமார் ரூ. 60,000 கோடி இழப்பு ஏற்படும் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் பெருமளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத யூனிடெக் நிறுவனம் ரூ.1,658 கோடிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வாங்கியது. அதில் 60 சதவீத பங்கை தற்பொழுது விற்று ரூ. 6,120 கோடி சம்பாதித்துள்ளது. இதைப்போல இன்னும் பல ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன.
இத்தகைய ஊழலில் சிக்கிய திமுக எவ்வாறு இந்திய அரசிடம் இலங்கை தமிழர்களுக்காக போராட முடியும் என்பதை தமிழ் மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
தற்பொழுது மின்சார உற்பத்தி 7,800 மெகாவாட். மின்சார தேவை 9,600 மெகாவாட். ஆகவே பற்றாக்குறை 1,800 மெகாவாட். இந்த பற்றாக்குறையை தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். பஞ்சாலைகள் மூடப்படுகின்றன.
இதுவரையில் அரசியல் கட்சிகள் தான் ஆர்ப்பாட்டம் நடத்துவது வழக்கம். இப்பொழுது பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அன்றாட வாழ்வே மின்சாரமில்லாததால் அவலநிலைக்கு ஆளாகிவிட்டது.
இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ ஒன்றும் தெரியாதவர்போல் ஊர் ஊருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அவரது ஆட்சியில் ஒழுங்காக மின் உற்பத்தி திட்டங்களை போட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications