மதிமுக எம்.எல்.ஏ இளவரசன் மறைவுக்கு கருணாநிதி, ஜெ. இரங்கல்
சென்னை: மதிமுக எம்.எல்.ஏ வீர. இளவரசன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். குறைந்த வயதில், அவர் மறைந்து விடுவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில், இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது.
சட்டமன்த்தில் அவர் சார்ந்திருந்த கட்சியின் சார்பில் வாதாடுகின்ற நேரத்திலும் கண்ணியம் சிறிதும் கெடாத நிலையில், பலமுறை அவர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
வரும் 10ம் தேதியன்று சட்டமன்றம் கூடுகின்ற நிலையில், இத்தகையதோர் செய்தி உள்ளம் உருக்குகின்ற ஒன்றாகும்.
அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், குழந்தைச் செல்வங்களுக்கும், உறவினர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயலிதா...
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வீர. இளவரசன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் மிகுந்த துயருற்றேன்.
வீர. இளவரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் சந்தானம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இளவரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications