புகை பிடிக்க தடை: பானுக்கு ஐ.நா. சபை கோரிக்கை
ஐ.நா.: ஐ.நா. பொதுச் சபை தலைமை அலுவலக வளாகத்தில் புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம், நியூயார்க் நகரி்ல் அமைந்துள்ளது. நியூயார்க் நகரில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஐ.நா. தலைமை அலுவலக வளாகத்திலும், புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க் நகரில் ஐ.நா. அலுவலகம் இருந்தாலும் அது அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதியாக கருதப்படுவதில்லை. சர்வதேச, சுயாட்சி பகுதியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நியூயார்க் நகர சட்ட திட்டங்கள் ஐ.நா. தலைமை அலுவலகத்தி்ற்குப் பொருந்தாது.
ஐ.நா. தலைமை அலுவலக லவுஞ்ச் பகுதியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் சரமாரியாக புகை விடுவதால் அந்தப் பகுதியே மாசடைந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே இங்கு புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல 2003ம் ஆண்டும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அப்போதைய பொதுச் செயலாளர் கோபி அன்னான், புகை பிடிக்க தடை விதித்தார். இருப்பினும் அது தோல்வியில் முடிந்தது.
அப்போது கோபி அன்னானின் நடவடிக்கையை விமர்சித்த ஒரு மூத்த தூதர், கோபி அன்னான் என்ன, ஐ.நா. சபை கட்டடத்தின் உரிமையாளரா, இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான இடம் என்று காட்டமாக கேட்டார். அத்தோடு நிற்காமல், நோ ஸ்மோக்கிங் என்று வைக்கப்பட்டிருந்த போர்டுக்கு கீழே நின்று சிகரெட்டைப் புகைத்தும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கோபி அன்னானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பான் கி மூன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இருப்பினும் பான் கி மூன் இதில் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க மாட்டார் என கருதப்படுகிறது.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், தடையை மீறி யாராவது ஒரு நாட்டின் மூத்த அதிகாரியோ அல்லது தூதரோ புகை பிடித்தால் என்ன செய்ய முடியும்?. அவரை வெளியே தூக்கி வீச முடியுமா? என்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications