பங்கு வர்த்தகத்திலும் இரண்டு வர்க்கம்!

கடந்த சில வாரங்களாக அன்றாட பங்கு வர்த்தகத்தை நிறுத்தி வைத்திருந்த கொங்குவேள் (பங்கு வர்த்தக ஆர்வத்தில் வங்கி வேலைக்கே விருப்ப ஓய்வு கொடுத்தவர்!!), நேற்றுதான் மீண்டும் பங்குத் தரகர் அலுவலகத்துக்கு வந்தார்.
தொடர்ந்து சில தினங்களாக வர்த்தகம் சற்று நிலைப்பட்டதற்கான அறிகுறி தெரிந்ததால், வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்து வழக்கமான தன் 'பங்கு ரேஸை' ஆரம்பித்தார்.
ரிலையன்ஸ் அவரது ஆல்டைம் பேவரைட் பங்கு. நேற்று ரூ.15,000 வரை அவரால் லாபம் பார்க்க முடிந்தது. அந்த லாபத்தையும் சேர்த்து வர்த்தக நேர முடிவில் வேறு சில நிறுவனப் பங்குகளை வாங்கி இன்று விற்கும் திட்டமிருந்தது அவருக்கு (இன்ட்ரா டேயில் சில தரகர்கள் இதை அனுமதிக்கிறார்கள், இதில் கமிஷன் அதிகம்).
இன்று காலையிலேயே தரகர் அலுவலகத்துக்கு வந்துவிட்டார் கொங்குவேள். வர்த்தக நேரம் ஆரம்பித்ததுமே அவருக்கு பெரும் அடி. 550 புள்ளிகளுக்குமேல் இறங்கிவிட்டது சென்செக்ஸ். இன்னும் அவரால் விற்க முடியவில்லை எந்தப் பங்கையும். இன்று மாலைக்குள் கூடுதல் தொகை கொடுத்துவிட்டு டெலிவரி எடுத்தாக வேண்டும்.
இது ஒரு சின்ன நிகழ்வுதான். சின்ன நஷ்டம்தான். ஆனால் பல லட்சம் கொங்குவேள்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக தினசரி இப்படித்தான் நிகழ்கிறது.
சர்வதேச பொருளாதார மந்தம், நிதி நெருக்கடி காரணமாக பெரிய நிறுவனங்கள் ஒரு பக்கம் சரிகின்றன. இன்னொரு பக்கம், பல 'மத்தியமர்கள்' இப்படி பொருளை இழந்து நடுத் தெருவுக்கு வருகின்றனர், இந்த ஹைடெக் 'ரேஸை' நம்பி.
இன்று செவ்வாய்க்கிழமை மார்க்கெட் நிலவரம் இப்படியே போனால் வர்த்தக நேர முடிவில் கொங்குவேளுக்கு மட்டும் இழப்பின் அளவு ரூ.25,000த்தைத் தாண்டக்கூடும். இந்தப் பங்குகளை வைத்திருந்து விற்கலாம் அவர். ஆனால் அதுவரை அவரது பணம் முடக்கப்பட்டுவிட்டதாகவே அர்த்தம். மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கும் வரை... நாடெங்கிலும் இப்படி முடங்கும் தொகை பல லட்சம் கோடிகள்.
அன்றைய முகமதிப்பு என்னவோ அதை வைத்துதான் இந்தப் பங்குகளின் லாப நஷ்டம் தீர்மானிக்கப்படும்.
எகனாமிக் டைம்ஸ், பிஸினஸ் ஸ்டாண்டர்டு என செய்தித் தாள்களைக் கரைத்துக் குடித்துப் பெற்ற விவரம் மற்றும் ஆர்வத்துடன் இந்த பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் சாதாரணர்களுக்கு இந்த நிலை.
இதில் இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு 'பல்க் டிரேடர்கள்' அல்லது மொத்த வர்த்தகர்கள் என்று பெயர். இவர்கள் கில்லாடிகள். எப்போதுமே உஷாராக நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.
ஒரு உதாரணம்:
ஒவ்வொரு நிறுவனமும் டிவிடெண்டுகள் எனப்படும் பங்கு லாப ஈவுத்தொகை அறிவிப்பை ஆண்டுதோறும் வெளியிடும். அந்த அறிவிப்பு வெளியாகும் ரெக்கார்ட் தேதியை இந்த பல்க் டிரேடர்களுக்கு அத்துபடி. பல நாளிதழ்களும் கூட இவற்றை வெளியிடுகின்றன.
எந்த நிறுவனமாவது டிவிடெண்ட் தரப்போவதாக அறிவித்தால் போதும், இந்த பல்க் டிரேடர்கள் அவற்றின் பங்குகளை லட்சக்கணக்கில் வாங்குவார்கள். இதனால் அவற்றின் பங்கு மதிப்பும் உயரும். ரெக்கார்ட் தேதி முடிந்ததும் சரசரவென பங்கு விலையும் சரிந்துவிடும். ஆனால், அதற்குள் வாங்கிய பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி இருப்பார்கள் இந்த பல்க் டிரேடர்கள்.
கிட்டத்தட்ட வாங்கிய விலைக்கே அல்லது அதைவிட குறைந்த விலைக்கு இவர்கள் விற்பது ஏன்...? அது ஒரு டெக்னிக்! வரி ஏய்ப்பு டெக்னிக்!!.
அதிக பங்குகளை வாங்குவதால் அவற்றுக்கான டிவிடெண்ட் முழுவதையும் பெற்றுக் கொள்கிறார்கள். விலை சரிந்த பிறகு பங்குகளை விற்பதால் வருமான வரித்துறைக்கு நஷ்டக் கணக்கைக் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். அந்த நேரத்தில் தங்களிடம் உள்ள பிற பங்குகளை லாபத்துக்கே விற்றாலும், ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு ஹைகிளாஸ் எகனாமிகல் க்ரைம்தான். ஆனால் சட்டம் ஒன்றும் செய்ய முடியாத, அங்கீகரிக்கப்பட்ட குற்றம்.
இதற்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவிடெண்ட் தரும் நிலையில் நிறுவனங்கள் இருந்தால் போதும்!.
டிவிடெண்டுக்கு வருமான வரி கிடையாது என சிறு முதலீட்டாளர்களுக்கு வருமான வரித்துறை அளித்திருந்த சலுகை ஓட்டைக்குள் இந்த பல்க் பெருச்சாளிகள் நுழைந்ததால்தான் இந்த நிலை.
இந் நிலையில் மிக லேட்டாக இப்போது தான் அந்த ஓட்டையை அடைத்துள்ளது வருமான வரித்துறை.
ஆனால், இவர்கள் இன்னொரு ஓட்டையை கண்டுபிடிக்காமலா விடுவார்கள்...?!












Click it and Unblock the Notifications