பீகார் ஐ. ஜனதாதள எம்பிக்கள் ராஜினாமா ஏற்பு
டெல்லி: மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையைக் கண்டித்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஐந்து பீகார் மாநில ஐக்கிய ஜனதாதள எம்.பிக்கள் சமர்ப்பித்த ராஜினாமா கடிதங்களை லோக்சபா சபாநாயகர்க சோம்நாத் சாட்டர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியினர் நடத்தி வரும் வட இந்தியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து ஐக்கிய ஜனதாதள எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் அறிவித்திருந்தார்.
அதை ஏற்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். தங்களது கடிதங்களை அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியிடம் கொடுக்க முயன்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் லோக்சபா செயலாளர் ஆச்சார்யாவிடம் கொடுத்தனர்.
இந்தக் கடிதங்களை சோம்நாத் சாட்டர்ஜி பரிசீலனை செய்தார். பின்னர் இந்தக் கடிதங்களை ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications