தீ விபத்திலிருந்து மீண்டது இந்தியன் வங்கி-தீ முற்றிலும் அணைப்பு
சென்னை: பெரும் தீவிபத்தில் சிக்கிய சென்னை இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. பணிகள் வழக்கம் போல நடப்பதாக வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜாஜி சாலையில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. 7 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் 5வது மாடியில் நேற்று முன்தினம் இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் ராட்சத கிரேன்கள் உள்ளிட்டவற்றுடன் விரைந்து வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் மின்சாரம் தடைபட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 5வது மாடியில் பற்றிய தீ 6வது மாடிக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 7 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. நேற்று காலையில்தான் தீயணைக்கும் பணி முடிவுக்கு வந்தது. இந்த பணியின்போது தீயணைப்புப் படை வீரர் மோகன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தீயணைப்புப் பணி முடிய 9 மணிக்கு மேல் ஆகி விட்டதால் பணிக்கு வந்த ஊழியர்கள், அவரவர் பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைகளில் 2 நாட்களுக்கு 'ரிப்போர்ட்' செய்யமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
தீவிபத்து குறித்து இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுந்தரராஜன் கூறுகையில், தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது. வங்கிப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. வழக்கம் போல பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து கிளைகளும், ஏடிஎம் மையங்களும் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி செயல்பட்டு வருகின்றன.
அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே தீயில் கருகி விட்டன. சேத மதிப்பை இனிமேல்தான் கணக்கிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications