ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி போராட்டம்
மதுரை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது.
மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்து நேற்று இப் போராட்டத்தை நடத்தின.
காலை 11 மணிக்கு மதுரை மேலமாசிவீதி - வடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த ஆர்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார்.
தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சே திரும்பிப் போ, இனக்கொலை புரியும் ராஜபக்சே திரும்பிப் போ, கொலைவெறியன் ராஜபக்சேவுடன் இந்திய அரசே கைகுலுக்காதே என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சையில் மாலை 5 மணிக்கு பனகல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications