சேலம் சட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
சேலம்: சென்னை சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்து சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர் வன்முறையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சட்டக் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை கல்லூரியில் வன்முறையில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் எங்கும் போய் படிக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலவரம் ஏற்படுவதைத் தடுக்கத் தவறிய கல்லூரி முதல்வர், வேடிக்கை பார்த்த காவல்துறையினரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இந்த வன்முறைக்குப் பின்னால் உள்ள ஜாதிச் சங்கத் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வக்கீல்கள் நாளை போராட்டம்
இதற்கிடையே சென்னை வன்முறையைக் கண்டித்து தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.