கடலூர், எண்ணூர், திருவொற்றியூரில் வீடுகளில் புகுந்த கடல் நீர்
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடலூர், சென்னை எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் கடல் பகுதியில் நேற்று இரவு ராட்சத அலைகள் எழுந்தன. கடல் அரிப்பைத் தடுப்பதற்காக போடப்பட்டுள்ள சுவரைத் தாண்டி அலைகள் இந்திராகாந்தி குப்பம், அப்பர் நகர், சின்ன குப்பம், பெரிய குப்பம், நெட்டு குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து எண்ணூர் பெரிய குப்பம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விசைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.
அதே போல கடலூர் சில்வர் பீச்சில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் புகுந்து கடலை ஒட்டிய சாலையை அரித்தது.
பெண்ணையாறு, கெடிலம் மற்றும் உப்பனாற்று முகத்துவாரங்களிலும் கடல் நீர் புகுந்தது. இந்த மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
அதே போல காரைக்காலிலும் தீவிர கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.