கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கப்படும் தமிழர்கள்
ராமேஸ்வரம்: தமிழ் இளைஞர்களை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும், ராணுவத்தில் சேர்த்து வருவதாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ள தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் சண்டை உக்கிரமடைந்து வருவதால் அங்கிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தினசரி அகதிகள் வருகிறார்கள்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு தலைமன்னாரிலிருந்து பிளாஸ்டிக் படகு மூலம் 11 குடும்பத்தைச் சேர்ந்த 29 பேர் (7 பெண்கள், 11 குழந்தைகள்) அரிச்சல்முனைக்கு வந்தனர்.
நேற்று தனுஷ்கோடி காவல் நிலையத்தில் அவர்கள் அடைக்கலம் புகுந்தனர். கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகள் கூறுகையில், ராணுவத்தின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு 103 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்து ஒரு பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
அங்கு விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு உள்ளதா, அவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். புலிகளுக்கு உதவுவோர் குறித்து தகவல் தர வேண்டும் என மிரட்டினர்.
மேலும், தமிழ் இளைஞர்களை தனியாகப் பிரித்து அனைவரும் ராணுவத்தில் சேர வேண்டும். இல்லாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவோம் என மிரட்டினர்.
ராணுவ கெடுபிடி அதிகமாகி வருவதால், உயிருக்குப் பயந்து தப்பி வந்துள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications