பூனகரியில் பின்வாங்கியது போர்த் தந்திரம் - 3 மாதங்களில் பெரும் தாக்குதல்: பிரபாகரன்

புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிர தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து கிளிநொச்சியை நோக்கி அது முன்னேறி வருகிறது.
கிளிநொச்சி நகருக்கு வெகு அருகில் இருப்பதாக கூறி வரும் ராணுவம் இன்னும் நகருக்குள் நுழைந்தபாடில்லை. இந்த நிலையில் முக்கியப் பகுதியான பூனகரியை ராணுவம் சில நாட்களுக்கு முன்பு பிடித்தது. இது புலிகளுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தப் பின்னணியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சேனாதிபதி ராஜா, சந்திரநேரு, ஜெனந்த மூர்த்தி ஆகியோர் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசியுள்ளனர். பூனகரி வீழ்ச்சி குறித்து அவர்கள் பிரபாகரனிடம் விவாதித்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் பேசிய பிரபாகரன், இது தோல்வி அல்ல. போர் உபாயம்தான். போர்த் தந்திரமாகத்தான் பூனகரிலிருந்து படைகள் விலகியுள்ளன. இன்னும் 3 மாதங்களில் மிகப் பெரிய தாக்குதலைத் தொடுக்கவிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
கடும் சண்டையில் - 20 ராணுவ வீரர்கள் பலி
இதற்கிடையே, வட முனையில் உள்ள முகமலைப் பிராந்தியத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த கடும் சண்டையில், காந்தால் என்ற இடத்தில் 20 ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். 80 பேர் படுகாயமடைந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலையில் ஆரம்பித்த சண்டை பிற்பகல் வரை நீடித்துள்ளது. இந்த சண்டையின் விளைவாக அப்பகுதியில் முன்னேறும் முயற்சியை விட்டு விட்டு ராணுவம் பின் வாங்கிச் சென்று விட்டது.
இலங்கை தரைப்படைக்கு ஆதரவாக விமானப்பட விமானங்களும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் புலிகளின் கொரில்லாத் தாக்குதலை ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை.
கிலாலி, முகமலை, காந்தால், பழாய், இயக்காச்சி, வடமராச்சி கிழக்கு ஆகிய பகுதிகளிலும் கடும் சண்டை நடந்தது.
காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட வீரர்களை இலங்கை விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications