4 மாணவர்களே மோதலுக்குக் காரணம்-வாக்குமூலம்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் ஏற்பட்ட மோதலுக்கு 4 மாணவர்களே காரணம் என கைதாகியுள்ள இளையராஜா என்ற உளுந்தூர்ப்பேட்டை மாணவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர் வன்முறை தொடர்பாக இளையராஜா என்ற மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வேப்பேரி பகுதியில் சந்தேகத்துக் கிடமாக சுற்றிய இவரை இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி தலைமையிலான போலீசார் விரட்டி பிடித்தனர்.
இளையராஜா, 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர். உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர்.
தாக்குதல் தொடர்பாக போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்து ஊர் ஊராக சுற்றியுள்ளார். இரண்டு நாட்கள் வேலூர் கோட்டையில் படுத்து உறங்கிய அவர் விழுப்புரத்தில் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளார்.
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து சென்னைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் போலீஸ் பிடியில் சிக்கினார்.
இளையராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
சட்டக் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இது வரை ஒவ்வொரு ஆண்டும், அங்கு படிக்கும் மாணவர்கள் சீனியர்- ஜூனியர் என மோதிக் கொள்வது தொடர் கதையாக வந்துள்ளது.
தற்போது சட்டக்கல்லூரி, 5ம் ஆண்டு படிக்கும் 7 மாணவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர்கள் வைத்தது தான் சட்டம். அந்த அளவிற்கு அவர்களது தலையீடு அதிகம்.
சில தினங்களுக்கு முன் 2ம் ஆண்டு, மாணவர்கள் ஒரு நோட்டீஸ் ஒன்றை ஒட்டினார்கள். அது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
5ம் ஆண்டு படிக்கும் விடுதி மாணவர்களான சித்திரை செல்வன், வெற்றி கொண்டான், குபேந்திரன், மணிமாறன் ஆகிய 4 மாணவர்கள் இதை பெரிதுபடுத்தி மாணவர்களிடையே கூட்டம் நடத்தி, உணர்ச்சி பொங்க பேசினார்கள். நாங்களும் அவர்களது பேச்சுக்கு கட்டுப்பட்டோம்.
11ம் தேதி 2-ம் ஆண்டு மாணவர்கள் எங்களது மாணவர் ஒருவரை பஸ் நிலையத்தில் தாக்கினர். 12ம் தேதியும் தாக்கக் கூடும் என பயந்தோம். அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என நினைத்து ஆயுதங்களுடன் கல்லூரிக்கு சென்றோம். அன்று தேர்வு எழுதாத 2வது ஆண்டு மாணவர்கள் நிறைய பேர் சுற்றினர்.
உடனடியாக அந்த 4 மாணவர்களும் விடுதிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து கூடுதல் மாணவர்களை வரவழைத்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்ததும் நாங்கள் தாக்குதலுக்கு தயாரானோம். அப்போது பாரதி கண்ணன் கத்தியுடன் எங்களை குத்த வந்ததால் தப்பி ஓடி விட்டோம். ஆனால் 4 மாணவர்களும் எங்களை விடாமல் தாக்குதலுக்கு தூண்டினர்.
அவர்களில் சித்திரை செல்வன் தான் பாரதி கண்ணனை அடித்து சாய்த்தார். அவர் கத்தியை எடுத்து குத்த வந்ததால் எங்களது பிரிவு மாணவர்கள் ஆத்திரத்தில் அவரையும் மற்ற மாணவர்களையும் தாக்கினர்.
எங்களை வெளியில் இருந்து யாரும் தூண்டவும் இல்லை, துண்டவும் முடியாது. இந்த தாக்குதலுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. மாணவர்களிடையே உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் என்று கூறியுள்ளார் இளையராஜா.
இந்த மோதலில் அரசியல் தொடர்பு இல்லை என்று இளையராஜா கூறியிருந்தாலும், அந்தக் கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்கள் மீது கல்வீச்சு:
இதற்கிடையே, பிராட்வே பஸ் நிலையத்தில் நேற்று இரவு திடீரென மர்ம ஆசாமிகள் சிலர் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராட்வே பேருந்து நிலையத்தில் நேற்றிரவு 11.45 மணியளவில் வெவ்வேறு பகுதிகளுக்கு புறப்படுவதற்கு தயாராக பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. சில பேருந்துகள் அன்றைய பணிகளை முடித்து கொண்டு பணிமனைக்கு சென்று கொண்டிருந்தன.
15பி, 18ஏ மற்றும் 38பி ஆகிய பேருந்துகள் அங்கு நின்று கொண்டிருந்தன. அப்போது சிலர் திடீரென அங்கு வந்து கல்வீச்சில் இறங்கினர். பின்னர் அவர்கள் ஓடிவிட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications