திட்டங்களை கைவிடும் டி.எல்.எப்-பணி நீக்கமும் ஆரம்பம்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று.
இதன் காரணமாக நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். தனது வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்கள் சிலவற்றை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
டிஎல்எப்பின் பங்குள் கடந்த ஆண்டில் மிக உச்சத்தில் இருந்தன. இதனால் இதன் உரிமையாளரான கே.பி.சிங் இந்தியாவின் மாபெரும் 5 பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
ஆனால், இப்போது பங்குகளின் விலைகள் சரிந்துவிட்ட நிலையில் இந்த நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளது.
இதுகுறித்து கே.பி.சிங் கூறுகையில், சில குடியிருப்பு, வர்த்தக மற்றும் ஹோட்டல் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளோம். நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்வமின்மை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்.
வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் வீடுகளின் தேவைகள் குறைந்துள்ளன. வீட்டுக் கடன் வட்டிகள் 7 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிலைமை சகஜமாகும்.
திட்டங்களை கைவிடுவதால் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளோம் என்றார்.
இந்த நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. திட்டங்கள் கைவிடப்பட்டால் அதை நம்பியிருந்த லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
எத்தனை திட்டங்களை டி.எல்.எப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என்பதை கே.பி.சிங் தெரிவிக்கவில்லை.