Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான்டெட்டில் தொடங்கிய இந்து தீவிரவாதம் - பரபரப்பு தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

நாசிக்: நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்து தீவிரவாதத்தின் வேர், 2006ம் ஆண்டே, மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் தொடங்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பே ..

2 ஆண்டுகளுக்கு முன்பே இந்து தீவிரவாத கட்டமைப்பு குறித்த தகவல் பாதுகாப்பு படையினருக்கு முதலில் கிடைத்துள்ளது. இதுதொடர்பான விரிவான விசாரணை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கைகள் நான்டெட் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டன.

2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்டெட்டில் உள்ள ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத் துறை அதிகாரி லட்சுமண் ராஜ்கோண்ட்வார் என்பவரது வீட்டில் குண்டுகள் வெடித்தன.

இதில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நரேஷ் ராஜ்கோண்ட்வால், ஹிமன்சு வெங்கடேஷ் பான்சே ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் 22 பேரை கைது செய்தனர். விசாரணையில், இந்துத்வா தீவிரவாத கட்டமைப்பு உருவாகி வருவது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. சிபிஐக்கு விசாரணை மாறியது.

ஆனால் சிபிஐக்கு மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சிபிஐயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் கைதான 22 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

அலட்சியப்படுத்திய அரசுகள் ..

மகாராஷ்டிர அரசும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்த வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டன.

ஆனால் மகாராஷ்டிர போலீஸார், சிபிஐ செய்ய வேண்டிய வேலையை செய்து இந்த கட்டமைப்பு குறித்த தகவல்களை வெளிக்கொணர்ந்து விட்டனர்.

போலி தாடி - மண்டை ஓடு!

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் போலியான தாடிகளும் (ஒட்டுத் தாடி), முஸ்லீம்களின் மண்டை ஓடுகள் ஆகியவற்றை போலீஸார் கண்டுபிடித்தனர். குண்டுவெடிப்புக்கான பொருட்களும் சிக்கின.

இதையடுத்தே முஸ்லீம்கள் என்ற போர்வையில் இந்துத்வா தீவிரவாதிகள் குண்டுகளைத் தயாரித்தது தெரிய வந்தது.

புனே அருகே பயிற்சி ..

2003ம் ஆண்டு புனே அருகே உள்ள சிங்காத் என்ற இடத்தில் உள்ள ஆகாஷ் ரிசார்ட்டில் வைத்து இந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தளத்தைச் ேசர்ந்த மும்பை மற்றும் புனே தலைவர்கள், இவர்களுக்கு நிதியுதவியும், ஆதரவும் அளித்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக வி.எச்.பி. தலைவர் கோவிந்தா புரானிக் என்பவரின் பெயரும் அடிபட்டது.

கடந்த 2004ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பார்பானி, ஜல்னா, பூர்னா ஆகிய இடங்களில் இந்த இந்து தீவிரவாதிகள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர்.

பிரவீன் தொகாடியா சந்தித்தார் ..

இந்துத்வா தீவிரவாதிகளை வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

நான்டெட் சம்பவத்தில் கைதானவர்கள், தங்களுக்குப் பயிற்சி அளித்தவர் குறித்த பல தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

நீண்ட தாடியும், உயரமும், நல்ல உடல்வாகும் கொண்டவர்தான் தங்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும், அவரது பெயர் மிதுன் சக்கரவர்த்தி என்றும், குண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குண்டுகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பையையும் அவர் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

புரோஹித்தான் மிதுன் சக்கரவர்த்தியா?

இவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கைதாகியுள்ள புரோஹித்தான், மிதுன் சக்கரவர்த்தியாக இருக்கக் கூடும் என மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்து தீவிரவாத கட்டமைப்பு நான்டெட்டிலிருந்து தொடங்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த கட்டமைப்பில் மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

புரோஹித் காவல் நீட்டிப்பு..

இதற்கிடையே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித்தின் சிறைக் காவல் நவம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வந்தார் புரோஹித். அவரது காவல் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாசிக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அவரது காவலை நவம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காந்தாரா உத்தரவிட்டார். புரோஹித் 11 நாள் போலீஸ் காவலில் முன்பு அனுப்பப்பட்டிருந்தார்.

புனே போலீஸாரிடம் ஒப்படைப்பு ..

மேலும், புனே தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் தற்போது புரோஹித் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புனேவைச் சேர்ந்த அமித் டேட் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கின் அடிப்படையில் புரோஹித்தை, புனே தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நாசிக் கோர்ட் உத்தரவிட்டது.

சமீர் குல்கர்னியும் ஒப்படைப்பு ..

இதேபோல இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான சமீர் குல்கர்னி, வேறு ஒரு வழக்குக்காக காத்கி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். புரோஹித் மூலமே அனைவரும் சிக்கினர்

இதற்கிடையே புரோஹித்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அனைத்து குற்றவாளிகளும் கைதாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

புரோஹித் மூலம் சிக்கிய குற்றவாளிகள் ..

நவம்பர் 5ம் தேதி மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் புரோஹித். அவரிடம் மூளை வரைபடச் சோதனை, பாலிகிராப், நார்கோ அனாலிசிஸ் சோதனை உள்ளிட்ட பல வகையான சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

அவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள், புரோஹித் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே மற்றவர்கள் சிக்கினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+