'கேங் ரேப்' கும்பலிடமிருந்து கன்னியாஸ்திரியைக் காத்த ஹிந்து!
புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸாவின் காந்தமால் பகுதியில் கற்பழிப்புக் கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரியை, மேலும் 2 பேர் கெடுக்க முயன்றபோது, அதைத் தடுத்து அவர்களிடமிருந்து ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் காத்துள்ளார். இந்தத் தகவலை அந்த கன்னியாஸ்திரியே போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ஒரிஸ்ஸாவில் பந்த் நடத்தப்பட்டது. இந்த பந்த்தின்போது, காந்தமால் மாவட்டம், பலிகுடா அருகே உள்ள நுவாகோன் என்ற இடத்தில் 29 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தற்போது அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, என்னை ஒருவர் கற்பழித்த பின்னர் மேலும் 2 பேர் என்னைக் கற்பழிக்க முயன்றனர். ஆனால் அப்போது உள்ளூரைச் சேர்ந்த ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறுக்கிட்டு, தடுத்து என்னைக் காப்பாற்றினார் என்று கூறியுள்ளார்.
இந்தத் தகவலை குற்றப் பிரிவு ஐஜி அருண் ரே உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கற்பழிப்பு சம்பவத்தின் சாட்சி சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரியும், பாதிரியார் தாமஸ் செலானும்தான். இருவரும் போலீஸாரிடம் நடந்தது குறித்து விவரித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தன்னைக் கெடுத்தவரின் முகம் நன்கு தெரியும் எனவும், அவரை அடையாளம் காட்ட முடியும் எனவும் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். இருப்பினும் தன்னைக் கெடுக்க முயன்ற மற்ற இருவர் குறித்த அடையாளம் தெரியவில்லை. அப்போது நான் அரை மயக்கத்தில் இருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் காந்தமால் போக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அந்த கன்னியாஸ்திரி, காந்தமாலைத் தவிர ஒரிஸ்ஸாவில் வேறு எங்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டாலும் அங்கு வர தயாராக இருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.