சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் பதிலளிப்பதா?-போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக, உள்துறைச் செயலாளரும், போலீஸ் கமிஷனரும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆணையர் பதிலளித்ததற்கு அரசுக்கு, உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் மோதிக் கொண்டபோது அமைதி காத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வக்கீல்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் கமிஷனரும், உள்துறைச் செயலாளரும் நேற்றைக்குப் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆணையர் நாராயணமூர்த்தி மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆணையரோ அல்லது உள்துறைச் செயலாளரோ பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா, நடந்த சம்பவத்தை விளக்கிக் கூற சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி விரும்பினார். எனவேதான் அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் என்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த தலைமை நீதிபதி கங்குலி, பணியில் கடமை தவறியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அதிகாரி எப்படி பதில் மனு தாக்கல் செய்யலாம்? அப்படி செய்ய முடியுமா?
போலீஸ் கமிஷனர், உள்துறைச் செயலாளர், கல்லூரியின் புதிய முதல்வர், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர், தேர்வுக் கன்ட்ரோலர் ஆகியோர் நவம்பர் 20ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications