பள்ளியில் மாணவர்கள் மோதல்-மண்டை உடைப்பு
நெல்லை: நெல்லையில் பள்ளிக்கூட மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவரின் மண்டை உடைந்தது.
நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ஸ்ரீதர். டவுனில் உள்ள சேப்டர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பள்ளியில் அழகனேரியை சேர்ந்த குணசீலன் மகன் விக்னேஷ் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த 10ம் தேதி பள்ளியில் இவர்கள் பாத்ரூம் சென்று விட்டு வரும்போது ஒருவருக்கொருவர் தெரியாமல் இடித்து விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் இது குறித்து தலைமை ஆசிரியரிடமும் புகார் செய்யப்பட்டது.
அவர் இரு மாணவர்களையும் அழைத்து எச்சரிக்கை செய்து இனிமேல் இதுபோன்று தகராறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கினார்.
இந்நிலையில் நேற்று இரு மாணவர்களும் மாடியில் உள்ள வகுப்பறையை விட்டு வெளியே வரும்போது ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தனர். அப்போது ஸ்ரீதர் ஏன் முறைக்கிறாய் என்று விக்னேஷிடம் கேட்டார்.
அதில் ஆத்திரமடைந்த அவர் வகுப்பறை கதவில் உள்ள இரும்பு தாழ்ப்பாளை பிடுங்கி ஸ்ரீதரின் தலையில் அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து ஸ்ரீதர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜங்ஷன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மாணவர்களும் இரு வேறு பிரிவினர் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications