சமாளிப்பான் சாமானியன்; 'பாவம்' முதலாளிகள்!!

சமீபத்தில் கிடுகிடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது கச்சா எண்ணெய் விலை. ஆனால் விலை ஏறும்போது கேட்ட கூக் குரல்களை இன்றைக்குக் காணோம். காரணம் முன்பு விட்டதைப் பிடிக்க, இப்போது 'கமுக்கமாக' லாபம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சரே பகிரங்கமாக அறிவித்துள்ளார் (இந்த பாலிடிக்ஸை விவரமாக பின்னர் பார்ப்போம்...).
உதாரணத்துக்கு, ஒரு லிட்டர் விமான பெட்ரோல் (ATF) விலை ரூ.40.69 காசுதான். கிட்டத்தட்ட 24 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண பெட்ரோலின் விலை 55 ரூபாய்க்கும் அதிகம் (மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்து...)
ஆனால் விமானக் கட்டணங்கள் மட்டும் முன்பைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எண்ணெய் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட விமானக் கட்டணத்தை குறைக்கும் ஐடியாவே எந்த தனியார் ஏர்வேஸூக்கு இல்லை போலிருக்கிறது.
இந்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், தனியார் விமான நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே பெட்ரோலியம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்கள் செயல்படுவதாக பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் ராம் நாயக் குற்றம் சாட்டியுள்ளதை வழக்கமான புகாராகத் தள்ளிவிட முடியாது.
ஒரு பக்கம் விமான நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரோ தனியார் விமான நிறுவனங்களுக்குப் பரிந்து கொண்டு வருகிறார். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் அரசு என பகிரங்கமாகப் பேசி வருகிறார் பிரபுல் பட்டேல்.
இன்னொரு பக்கம் 'நஷ்டத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன பெட்ரோல் நிறுவனங்கள்!' என உருக்கமாகப் பேசும் முரளி தியோராவும் கூட, விமான எரிபொருள்களுக்கு மட்டும் தாராளமான விலைக் குறைப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார்.
இதே சலுகைகள் பயணிகளுக்கும் கிடைக்குமா... விமான எரிபொருளுக்கு கிடைத்த வரிச் சலுகைகள், தீர்வை விலக்குகள் சாமானியர்கள் பயன்படுத்தும் சாதா பெட்ரோலுக்கும் கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்காது. பேருக்கு ஒரு ரூபாயோ 4 ரூபாயோ குறைத்துவிட்டு அமைதியாகி விடுவார்கள்.
என்ன செய்தாலும், சாமானியன் தான் சமாளிப்பானே.. முதலாளிகள் தானே 'பாவம்'!!












Click it and Unblock the Notifications