5 நாட்களுக்கு ஜாம்ஷெட்பூர் ஆலையை மூடுகிறது டாடா
ஜாம்ஷெட்பூர்: பொருளாதார நெருக்கடியின் விளைவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாம்ஷெட்பூரில் உள்ள வணிக வாகன உற்பத்திப் பிரிவை நவம்பர் 25ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு மூடுகிறது.
இந்தியாவின் பிற வர்த்தக நிறுவனங்களைப் போலவே நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸும் பொருளாதார நெருக்கடியால் பாதிப்புககுள்ளாகியுள்ளது.
நிலைமையை சமாளிக்க பல்வேறு சிக்கண நடவடிக்கைகளில் அது இறங்கியுள்ளது.
ஜாம்ஷெட்பூரில் உள்ள தனது வணிக வாகன உற்பத்திப் பிரிவை அது ஐந்து நாட்களுக்கு மூடவுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை இந்த உற்பத்திப் பிரிவு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் ஐந்து நாட்களுக்கு இப்பிரிவு மூடப்படவுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஜாம்ஷெட்பூர் பிரிவு மூடப்படுவது இது நான்காவது முறையாகும். ஒரே மாதத்தில் 2வது முறையாகும்.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் பி.ஜே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாம்ஷெட்பூரில் உள்ள வணிக வாகன உற்பத்திப் பிரிவு நவம்பர் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
தொழில்துறையில் நிலவம் நிதி நெருக்கடி, உயர்ந்து விட்ட கடன் வட்டி விகிதங்கள் காரணமாக வாடிக்கையாளர்களின் வாகன விருப்பம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தகமும் குறைந்துள்ளது.
அக்டோபர் மாதம் முதலே இந்த நிலைதான். எனவே நிலைமைக்கு ஏற்ப அவ்வப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்தமான முடிவுகளை எடுத்து வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கும், டீலர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையிலேயே இந்த 5 நாள் மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஜாம்ஷெட்பூர் பிரிவில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தினசரி வாகன உற்பத்தி 500 ஆக இருந்தது. தற்போது அது 150 ஆக குறைந்துள்ளதாம்.
ஏற்கனவே 3000 தற்காலிக ஊழியர்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேலையிலிருந்து எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பணி ஷிப்டுகளையும் அது 3 என்பதிலிருந்து ஒன்றாக குறைத்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications