அதிமுகவுடன் கூட்டணி: அழைக்கும் சிபிஐ, விரும்பாத சிபிஎம்
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேருவது குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் ஆலோசனை நடத்தினார். ஆனால், அதிமுகவுடன் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் ஆர்வம் காட்டப்படவில்லை என்று தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி, பர்தன் கடந்த புதன்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்துப் பேசினார்.
இதையடுத்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகளின் மூத்த மாநில நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் கோபு ஆகியோர் மார்க்சிஸ்ட் அலுவலகம் சென்று, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் செல்வ சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
ஜெயலலிதாவுடன் பர்தன் நடத்திய பேச்சு குறித்து தா.பாண்டியன் மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் விளக்கினார். மேலும் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமி்ல்லை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவுடன் கூட்டணி என்பது தங்களுக்கு கொள்கைரீதியிலேயே ஒத்து வராது என மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
திமுக, அதிமுக இரு கட்சிகளையும் விட்டுவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications