தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு கன மழை: வானிலை மையம் எச்சரிக்கை

இலங்கைக் கடற்கரையில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திர கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அது அதே இடத்தில் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யும்.
சென்னை நகரில் மேகமூட்டம் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் விடிய விடிய நல்ல மழை பெய்தது. இன்று காலையும் மழை நீடித்தது.
ஆங்காங்கே தூறலும், வானம் மேக மூட்டமாகவும் காணப்படுகிறது. இரவு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோடு, ஜி.என். செட்டிரோடு, ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் தண்ணீர் பெருமளவு தேங்கி கிடக்கிறது. மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் சாலை தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கணேசபுரம் சுரங்கப் பாதையில் சூழந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றுகிறார்கள்.
வடக்கு உஸ்மான் ரோடு, ஸ்டெர்லிங்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மரம் விழுந்து கார் சேதம்:
கொடுங்கையூரில் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற மரத்தில் ஒரு கிளை முறிந்து விழுந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட காரில் அந்த மரக்கிளை விழுந்ததால் கார் சேதம் அடைந்தது.
புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் மழைநீர் கால் வாய்க்காக தோண்டப்பட்ட நீண்ட பள்ளம் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு காலையிலேயே ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கடலூரில் கடல் சீற்றம்:
கடலூரில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை இன்றும் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதி களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் துறைமுக முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. செஞ்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை நீடிக்கிறது.
புதுச்சேரியிலும் மழை விளாசல்:
புதுவையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கிது. இரவு பலத்த மழை கொட்டியது. இன்று காலையும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.
காவிரி மாவட்டங்களிலும் நல்ல மழை:
திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக் கேட்டை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது.
நெல்லை, குமரி மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டுகிறது. மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
ராமேஸ்வரத்தில் விடிய விடிய மழை:
ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், உச்சிப் புளி, தனுஷ்கோடி, பனைக் குளம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
வழக்கத்தைவிட ராமேசு வரம் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகவே இருந்தது. இதேபோல் பாம்பன் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப் பட்டது.
வைகை நீர்மட்டம் உயர்வு:
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், போடி, உத்தமபாளையம், பெரிய குளம் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முழு வதும் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இன்று காலையும் லேசான மழை பெய்து வருகிறது.
மாயாற்றில் வெள்ளப் பெருக்கு:
முதுமலை வனப்பகுதியில் மட்டும் இடைவிடாமல் பலத்த மழை கொட்டுகிறது. இதனால் மாயாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. சேலம், தர்மபுரியில் லேசாக மழை தூறியது. ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications