சிதம்பரத்திற்கு ஆணவம் அதிகம் - யஷ்வந்த் சின்ஹா விளாசல்
டெல்லி: நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆணவம் பிடித்தவர். அவரிடம் நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையான தகவல்களை எதிர்பார்க்க முடியாது. காரணம் அவரிடம் எப்போதுமே நேர்மை இருந்த்தில்லை என்கிறார் முன்னாள் நிதியமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா.
முன்னணி தொழிலதிபர்கள் 15 பேரை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி சந்தித்து பேசியது நினைவிருக்கும். நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அதன் இந்திய பாதிப்புக் குறித்தும் அவர்களிடம் விவாதித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பின்னர் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் மெக்கைன் போன்றவர்தான் அத்வானி. மெக்கைனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது. அத்வானிக்கும் ஒன்றும் தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டும் என்று அத்வானி ஆசைப்பட்டால், அதை பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை, என்றார் கிண்டலாக.
இதற்கு யஷ்வந்த் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், உண்மையில் நாட்டின் பொருளாதாரம் பற்றித் தெரியாதவர் சிதம்பரம்தான். விவசாயிகளின் விரோதி அவர்.
அதனால்தான் நாட்டின் பொருளாதார நிலை குறித்து தவறான தகவல்களைத் தருகிறார்.
அவரிடம் நேர்மை கிடையாது. அதனால் உண்மையான தகவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கவும் முடியாது. அவர் ஆணவம் பிடித்தவர். அவருக்கு அத்வானியை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என்றார் காட்டமாக.












Click it and Unblock the Notifications