Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் கன மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - கடல் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

INSAT image
சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் காணப்பட்டது.

திருவொற்றியூரில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நெல்லையில் பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லையிலும், பாளையங்கோட்டையிலும் விடிய விடிய மழை பெய்ததால் இரு நகரங்களும் வெள்ளக்காடாகின.

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தபடி இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில், அணையைத் தாண்டி வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது.

தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை சுப்ரமணிய சுவாசமி கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் உற்சவர் சிலை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரிரைச்சலுடன் அங்கு தண்ணீர் கொட்டி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் உப்புத் தொழில் மந்த நிலையில் இருந்து வருகிறது. இப்போது கன மழை பெய்வதால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளி்ப்பு

கன மழை காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் மிகவும் மெதுவாக இயக்கப்படுகின்றன.

ரயில் பாலத்தைத் தொட்டுக் கொண்டு கடல் நீர் போவதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசியதால் ராட்சத அலைகளும் எழுந்தவண்ணம் இருந்தன.

பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்பட்டதால், தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அக்னிதீர்த்த கடல் பகுதி அமைதியான பகுதியாக கூறப்படும். ஆனால் அங்கும் நேற்று கடல் கொந்தளித்துக் காணப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் ..

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக அங்கு மழை பெய்து வருகிறது.

இதே போல வேலூர், திருச்சி, கொடைக்கானல், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. தொடர்ந்து பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+