2.5 லட்சம் அமெரிக்கருக்கு வேலை: ஓபாமா உறுதி
வாஷிங்டன்: அடுத்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தயார் செய்துள்ளதாக பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமா ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்காவின் வீட்டு வசதி துறை, நிதித்துறை, வங்கி செயல்பாடுகள் ஆகியவை பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. வரலாறு காணாத வேலையிழப்புகள், தற்கொலைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. தொடர்ந்து 22 வங்கிகள் திவாலாகியுள்ளன.
இந்த நெருக்கடி 2009-10 ஆண்டுகளில் முழுமையாகத் தொடரும் என எச்சரித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.
இதை நன்கு உணர்ந்துள்ள ஓபாமா, இப்போதே அதற்கேற்ப முன்னேற்பாட்டுத் திட்டங்களில் இறங்கியுள்ளார்.
2.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளார்.
இதில் சாலைகள் போடுவது, பாலங்கள் அமைத்தல், பள்ளிகளை நவீனப்படுத்துவது, மாற்று எரிபொருள்களை உருவாக்குவது, அதிக மைலேஜ் தரும் திறனுள்ள கார்களை உருவாக்குவது என ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
இதைத் தவிர உள்நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகையும், வேலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக வரிச் சுமை என்ற தி்ட்டமும் அடங்கும் (இது தான் இந்தியாவை திக்.. திக்.. அடைய வைத்துள்ளது.)
'இவை உடனடியாக இப்போதைய நெருக்கடியைத் தீர்க்க உதவாது என்றாலும், நீண்ட கால அடிப்படையிலான நல்ல முதலீடுகள். இவற்றை உரிய நேரத்தில் சரியாகச் செய்து வந்தாலே போதும் நாடு அடிக்கடி மந்த நிலைக்குத் தாவுவது நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார் ஓபாமா.
இப்போது அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களைச் சந்திக்க தமது திட்டங்கள் போதுமானவை என்றும் தெரிவித்துள்ளார் ஓபாமா.












Click it and Unblock the Notifications