நெருக்கிய கூட்டம்-அஸாருதீன் சலூனில் தஞ்சம்
டெல்லி: தேர்தல் பிரசாரத்திற்காக டெல்லி சென்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகம்மது அஸாருதீன், அங்கு ரசிகர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்ட போலீஸார், பாதுகாப்பு கருதி, அருகில் இருந்த ஒரு சலூனில் சிறிது நேரம் கொண்டு சென்று வைத்திருந்தனர்.
டெல்லியில் சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வட கிழக்கு டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹசன் அகமதுவுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய அஸாருதீன் அழைக்கப்பட்டிருந்தார்.
அஸாரும் பிரசாரத்திற்காக முஸ்தபாபாத்துக்கு வந்தார். அஸாருதீன் வருகையை அறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர்.
இவ்வளவு பேர் வருவார்கள் என்பதை போலீஸாரும், காங்கிரஸாரும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் அஸாருதீனை தொட்டுப் பார்க்கவும், பேசவும் முயன்றனர். இதனால் அவர்களிடம் சிக்கித் தவித்தார் அஸார்.
இதையடுத்து போலீஸார், அஸாருதீனை மீட்டு அருகில் இருந்த குஷ்னுமா ஹேர் டிரஸ்ஸர் என்ற சலூனுக்குள் கொண்டு சென்று உள்ளே உட்கார வைத்தனர்.
பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அதன் பின்னரே, சலூனை விட்டு அஸாருதீனை போலீஸார் வெளியே அழைத்து வந்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அஸார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், வேறு வழியின்றி போலீஸார் என்னை சலூனுக்குள் கொண்டு சென்று அமர வைத்தனர். கூடுதல் போலீஸார் வந்த பின்னர்தான் நான் வெளியே வர முடிந்தது.
வழக்கமாக முடியை வெட்டத்தான் சலூனுக்குப் போவார்கள். எனக்கு கூட்ட நெரிசல் மற்றும் பரபரப்பால், மயிர்க்கூச்செறிந்து போனது என்றார் அஸார்.
இந்த சம்பவம் குறித்து கம்ரன் என்ற 14 வயது சிறுவன் கூறுகையில், எனது தம்பி ஜமால் அப்போது சலூனில் முடி வெட்டிக் கொண்டிருந்தான். திடீரென அஸாருதீன் வந்ததால் அவன் குழம்பிப் போய் விட்டான்.
முடிவெட்டுவதற்காக எதற்கு அஸாருதீன் ஹைதராபாத்திலிருந்து முஸ்தபாபாத்துக்கு வந்துள்ளார் என்று அப்பாவியாக என்னிடம் கேட்டான்.
எனக்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் கூட்ட நெரிசலில் சிக்கி அவர் மீட்கப்பட்டு சலூனுக்குள் கொண்டு வரப்பட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றான்.












Click it and Unblock the Notifications