பாகிஸ்தானிலிருந்து கடல் வழியே வந்த தீவிரவாதிகள்
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் உயிரோடு பிடிபட்டுள்ளான். அவனிடம் இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா', மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ, மும்பை போலீசார் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் 10 இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் சிலர் தப்பியோடிவிட்டனர்.
ஒபராய் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் ஹோட்டல் ஆகிய இடங்களில் பிணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு சில தீவிரவாதிகள் உள்ளனர். இவர்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்று தெரியவில்லை
இவர்கள் தவிர 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி பிடிபட்டுள்ளான். அவனிடம் ரா, ஐபி, மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவன் தந்த தகவலின்படி இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தான் என இன்டலிஜென்ஸ் பீரோ கூறியுள்ளது.
கராச்சியில் இருந்து அவர்கள் கடல் வழியே நேரடியாக மும்பைக்குள் நுழைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இவர்கள் இவ்வளவு தூரத்தை படகில் கடந்திருக்க முடியாது. ஏதோ ஒரு கப்பலில் வந்து பின்னர் படகு மூலம் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஆனால், இதை திசை திருப்பவே டெக்கன் முஹாகிதீன் என்ற அமைப்பின் பெயரை பயன்படுத்தி அவர்களை இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்க வைத்ததாகவும் இன்டலிஜென்ஸ் பீரோ கூறுகிறது.
கப்பற்படை தேடல்-படகு சிக்கியது?:
இதற்கிடையே தீவிரவாதிகளை மும்பைக்குள் இறக்கிவிட்டுத் தப்பிய படகை கடற் படையினர் அடையாளம் கண்டுவிட்டதாகவும் அதை போர் கப்பல்கள் விரட்டிச் சென்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
பேச்சுவார்த்தை இல்லை:
இதற்கிடையே இப்போது பிணயக் கைதிகளை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளிடம் அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலை மகாராஷ்டிர துணை முதல்வர் பாட்டீல் மறுத்துள்ளார்.
அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அவர்கள் இதுவரை எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications