கமாண்டோக்களை அனுப்ப தயாரான இஸ்ரேல்-ஏற்க மறுத்த இந்தியா
ஜெருசலேம்: மும்பை ஹோட்டல்களில் புகுந்த தீவிரவாதிகளைப் பிடிக்க எடுத்த எடுப்பிலேயே என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் தாக்காமல், உரிய முன்னேற்பாடுகளுடன் இறங்கியிருக்க வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், முதலில் அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்கு அதிரடிப்படையினர் கொண்டு வந்திருக்க வேண்டும். பின்னர் உரிய உளவுத் தகவல்களை சேகரித்திருக்க வேண்டும்.
உள்ளே எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள், எத்தனை அறைகள் உள்ளன, எந்த வழியாக போகலாம், எந்த வழியாக தீவிரவாதிகள் தப்ப முடியும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்திருக்க வேண்டும்.
அதன் பின்னரே மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் இறங்கியிருக்க வேண்டும்.
இதுபோன்ற சமயங்களில், முதலில் சம்பவ இடத்தை பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பின்னர்தான் மற்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இஸ்ரேலின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஷின் பெட், ஜெருசலேம் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மும்பை சம்பவத்தில், சம்பந்தப்பட்ட இடங்களில் குவிந்த பாதுகாப்புப் படையினர், எடுத்த எடுப்பிலேயே சுட ஆரம்பித்து விட்டனர். இதனால்தான் உயிரிழப்புகள் அதிகமாகி விட்டது என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் உதவி-ஏற்க மறுத்த இந்தியா:
முன்னதாக தீவிரவாதிகளைத் தாக்க தனது கமாண்டோக்களை அனுப்புவதாக இஸ்ரேல் கூறியது. ஆனால், அதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து தீவிரவாதிகளிடம் யூதர்கள் மாட்டிய நரிமன் ஹவுசிலாவது இஸ்ரேலிய கமாண்டோக்களை பணியில் ஈடுபடுத்துமாறு அந்த நாடு கோரியது. அதையும் இந்தியா ஏற்கவில்லை.
இங்கிலாந்து அனுப்பிய 'நிகோசியேட்டர்':
அதே போல தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த 'Negotiation expert' ஒருவரை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்ட் அனுப்பி வைத்தது. ஆனால், தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தும் திட்டமில்லை என்று கூறி இங்கிலாந்தின் உதவியையும் இந்தியா ஏற்கவில்லை.