மழையால் தமிழகம் சீர்குலைவு: கருணாநிதி
சென்னை: ஒரு வார காலமாக பெய்த கன மழையால் தமிழகம் பெரும் சீர்குலைவை சந்தித்துள்ளது. 103 உயிர்கள் பலியாகியுள்ளன. 5.53 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் அழிந்து விட்டன. 6700 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை வெள்ள நிவாரணத்திற்காக முதல் தவணையாக ரூ. 100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. தற்போது போர்க்கால அடிப்படையில், நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
சேத நிலவரங்களை முழுமையான அளவில் மதிப்பிட்ட பின்னர் தேவையான உதவிகள் கோரி மத்திய அரசை தமிழக அரசு அணுகும்.
இதுவரை கிடைத்த சேத நிலவரப்படி, மொத்தம் 103 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர். 450 கால்நடைகளும் பலியாகியுள்ளன. 50 ஆயிரத்து 890 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலும் குடிசைகளே அதிகம்.
6700 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 687 பாலங்கள், 402 அரசுக் கட்டடங்கள் மழையால் சேதமடைந்துள்ளன.
கன மழை காரணமாக 5 லட்சத்து 22 ஆயிரத்து 290 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. 7 லட்சம் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தலைமைச் செயலாளர் முதல் அனைத்துத் துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் 2099 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 10 லட்சம் மக்கள் வரை தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள் தவிர காவல்துறையினரும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ. 2000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் ரூ. 75 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.