அமெரிக்க-ஐரோப்பிய நெருக்கடி: 5 லட்சம் கைவினைக் கலைஞர்கள் பாதிப்பு!
டெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் 5 லட்சம் கைவினைக் கலைஞர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கைவினைப் பொருட்கள் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்திய கைவினைக் கலைஞர்கள்தான்.
கிட்டத்தட்ட 5 லட்சம் கைவினைஞர்கள் தொழில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக இந்திய சிறுதொழில் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இந்தத் துறையில் மட்டும் 10 லட்சம் கைவினைக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்களாம். இவர்களில் 50 சதவிகிதம் பேர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக முரதாபாத், ஜெய்பூர், சஹாரன்பூர், ஜோத்பூர் மற்றும் நர்சாபூர் போன்ற நகரங்களில்தான் அதிக கலைஞர்கள் வேலையிழந்து தவிக்கிறார்களாம்.
'இதுவரை 40 சதவிகித கைவினைப் பொருள் தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் கலைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இது இன்னும் கூட அதிகரிக்கும் அபாயம் உள்ளத. மேலும் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் அடியோடு நின்று போய்விட்டன. உள்நாட்டில் பண்டிகைக் காலத்தில் கூட கைவினைப் பொருட்கள் விற்பனையாகும் வழியைக் காணவில்லை', என்கிறார் அகில இந்திய கைவினைக் கழக துணைத் தலைவர் சுதிர் தியாகி.