கான்டலீசா ரைஸை அனுப்பி வைக்கும் ஜார்ஜ் புஷ்
வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதலால் அதிர்ந்து போயிருக்கும் இந்தியாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸை இந்தியாவுக்கு செல்லுமாறு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பணித்துள்ளார்.
புதன்கிழமை ரைஸ் டெல்லி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேனா பெரினோ கூறுகையில், இந்த வாரத்தில் இந்தியா செல்லுமாறு கான்டலீசா ரைஸை அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலில் ஏற்கனவே திட்டமிட்ட பயணமான லண்டனுக்கு ரைஸ் செல்வார். அங்கு நேட்டோ கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் டெல்லிக்கு புதன்கிழமை அவர் செல்வார்.
இந்திய மக்களுக்கு அமெரிக்காவும், அதன் மக்களும் துணையாக நிற்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையி்ல் ரைஸின் பயணம் அமையும் என்றார்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் இன்று அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக செல்கிறார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அரசுடன் மேனன் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவையும் மேனன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.