எங்களுக்கு பாதிப்பில்லை-பாரமவுண்ட்

சிறிய விமான நிறுவனமான இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே மிக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் இது. பல்வேறு விமான நிறுவனங்களும் நஷ்டத்தில் மூழ்கிக் கிடக்கும் பாரமவுண்ட் நிறுவனத்தின் நிதி நிலை ஸ்திரமாகவே உள்ளது.
இந் நிலையில் இதன் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மலேசிய நிறுவனமான ஏர்-ஏசியா தனது சேவையை திருச்சியிலிருந்து துவக்கவுள்ளது. இந்த நிறுவனம் தனது மார்க்கெட்டிங் பணிகளை கவனிக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதைத் தவிர மேலும் பல சர்வதேச, உள்நாட்டு நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. ஆராய்ந்து முடிவெடுப்போம்.
சர்வதேச பொருளாதார சீர்குலைவால் எங்கள் நிறுவனத்துக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. விரைவில் 2 புதிய விமானங்களை வாங்கவுள்ளோம்.
சென்னையிலிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.
விடுமுறைக் காலத்தையொட்டி பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளோம். பயணியோடு மற்றொருவர் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கப்படும். அவ்வாறு செல்பவர் பயணச் சீட்டுக்குரிய வரியை மட்டும் செலுத்தினால்போதும். இந்த சலுகை விடுமுறைக் காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
மதுரையில் இருந்து சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறோம். விரைவில் இந்தியாவின் மேற்கு பகுதியில் மாநிலங்களின் தலைநகரங்களுக்கு விமான சேவை தொடங்குவோம்.
விமான எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதோடு செலவுகளும் அதிகரித்துள்ளதால் விமான கட்டணம் தற்போது குறைய வாய்ப்பில்லை.
எங்கள் விமானங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் 'பாரமவுண்ட் ராயல்' கிளப் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications