சவான் முதல்வராகிறார்-ஏற்க மறுத்த ராணே நீக்கம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் சவானுக்கு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவரை முதல்வராக ஏற்க மறுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்த மூத்த தலைவர் நாராயண் ராணே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் சவான், துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால் ஆகியோர் மும்பையில் நேற்று ஆளுநர் ஜமீரை சந்தித்தனர்.
சட்டசபைக் கட்சித் தலைவர்களாக தாங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அது தொடர்பான கடிதத்தையும், 168 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதைத் தெரிவிக்கும் கடிதத்தையும் அளித்தனர்.
இவர்களுடன் பதவி விலகும் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.
இதையடுத்து சவானை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ஜமீர் அழைப்பு விடுத்தார்.
பதவியேற்பு விழா நாளை அல்லது திங்கள்கிழமை காலை நடைபெறும் எனத் தெரிகிறது.
ஆனால், சவானை முதல்வராக ஏற்க முடியாது என மகாராஷ்டிர மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராணே போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
சிவசேனாவிலிருந்து காங்கிரசுக்கு வந்த அவர் முதல்வர் பதவியைர் பிடிக்க நெடு நாட்களாகவே முயன்று வருகிறார். இம்முறை முதல்வராகிவிடலாம் என்ற கனவில் இருந்தார்.
அசோக் சவானை முதல்வராக ஏற்க தேசியவாத கட்சியின் தலைவர் பவார் எதிர்ப்புத் தெரிவித்தபோது ராணேவை முதல்வராக்குவோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், ராணேவை சமாளிப்பது மிகவும் கஷ்டம் என்பதால் தான் சவானை ஏற்க முன் வந்தார் பவார்.
இவ்வாறு தன்னை பயன்படுத்தி அசோக் சவானை முதல்வராக்கியதால் காங்கிரஸ் மீது கடுப்பாகியுள்ளார் ராணே. இதனால் சவானின் கீழ் தன்னால் பணியாற்ற முடியாது என்று அறிவித்துள்ளார். மேலும் சோனியாவையும் அவர் விமர்சித்தார்.
அவருக்கு சில எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டுள்லது. இதனால் கட்சியில் பிளவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications