சட்ட மாணவர்களின் ஜாமீன், முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 29 பேர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கர மோதலில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 29 மாணவர்கள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த விவாதத்தின் இறுதியில் நேற்று இரவு நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார்.
அரசுத் தரப்பில் மாணவர்களுக்கு ஜாமீன் அளிக்க கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. சில மாணவர்களின் வன்முறையால் 2000 மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலால், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பரீட்சைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
கைது செய்ய்பட்டவர்களை விடுதலை செய்தால், அது மீண்டும் நடக்கவுள்ள தேர்வுகளைப் பாதிக்கும். இந்த மாணவர்களால் தாக்கப்படக் கூடும் என்ற பயம் மற்ற மாணவர்களுக்கு ஏற்படலாம் என்றார்.
வாதங்களை கேட்டு முடித்த நீதிபதி இரவு 10 மணியளவில் தனது தீர்ப்பை அறிவித்தார். அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார்.
இதேபோல சட்டக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை தாக்கியது தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரியிருந்த 13 பேரின் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications