குறையாத கேஸ் விலை-மக்கள் கொதிப்பு
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையை மட்டும் குறைத்து விட்டு வீட்டு உபோயகத்திற்கான கேஸ் சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு குறைக்காமல் விட்டு விட்டதால் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கச்சா எண்ணெயின் விலை உயர்வைக் காரணம் காட்டி கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலையுடன், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு பெருமளவில் உயர்த்தியது.
சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்படைந்தனர். ஆந்திராவில், இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக் கொள்ளும் என அம்மாநில காங்கிரஸ் அரசு அறிவித்தது.
தமிழகத்தில், ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்பவர்களுக்கு 30 ரூபாயை அரசு செலுத்தும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை அறிவித்தார். ஆனால் காஸ் விலையில் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை.
இது குடும்பத் தலைவிகளை பெரும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில்தான் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டது.
அதேபோல வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்படும் என பெண்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு குறைக்கப்படாததால் குடும்பத்தலைவிகள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த கேஸ் விலை உயர்வால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேஸ் பதிவு செய்தாலும் குறைந்தது 10 நாட்களுக்குப் பிறகுதான் தருகிறார்கள். இந்த நிலையில் விலையையும் குறைக்காமல் மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினரை வாட்டி வருவது நியாயமற்றது என்று அவர்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications