ரயில் மறியல்-தமுமுக தொண்டர்கள் கைது
சென்னை: அயோத்தியில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என்று கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கான தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமாகும். இதையொட்டி மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமுமுக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தமுமுகவினர் ஆயிரக்கணக்கில் ரயில்களை மறிக்கத் திரண்டனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னையில் ...
சென்னையில் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அருகே மறியல் போராட்டம் நடத்த தமுமுகவினர் முயன்றனர்.
எழும்பூர் ரவுண்டானாவில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகே மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் தமுமுகவினர் திரண்டு ரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர்.
திடுதிடுவென அவர்கள் ஓடியதால் போலீஸார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அப்போது தலைமைக் காவலர் முருகையா என்பவர் கீழே விழுந்து பலத்த அடிபட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ரயில் நிலையப் பகுதியில் நின்றிருந்த போலீஸார் ஓடி வந்த தமுமுகவினரை தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
அதேபோல சென்டிரல் ரயில் நிலையம் அருகே பழைய மூர்மார்க்கெட் பகுதியில் குவிந்த தொண்டர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் தமுமுக சார்பில் மாநிலச் செயலாளர் முகமது கவுஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களைப் போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தமுமுகவினர் கைதானதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications