பக்ரீத்: முஸ்லீம்களுக்கு விஜயகாந்த், சரத்குமார் வாழ்த்து
சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம் சமுதாயத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குர்பானி கொடுங்கள் - விஜயகாந்த்
விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
தேமுதிக சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தியாக திருநாளில் வேலூர் மாவட்டத்தில் மேல்விஷாரத்தில் நான் கலந்து கொண்டு குர்பானி வழங்க உள்ளேன்.
ஒரு மதத்தைச் சேர்ந்த முக்கிய நிகழ்ச்சியில் அந்த மதத்துக்குரியவர்கள் மட்டுமல்லாமல் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதில்தான் மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் வளரும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இத்தகைய நல்லுறவு நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த உயர்ந்த மரபுக்கு ஏற்ப தேமுதிக தோழர்கள் இத்திருநாளில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்.
மனித சமுதாயம் கூடி வாழும் தன்மையை கொண்டது. ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்தும், உதவி செய்தும் அன்பையும், அறத்தையும் வளர்ப்பது சமுதாயம் இயங்குவதற்கு அச்சாணியாகும்.
அத்தகைய தொண்டையும், தியாகத்தையும் இஸ்லாம் மார்க்கத்தின் மூலம் மனித குலத்திற்கு தெரிவிக்கும் நாளே பக்ரீத் நாளாகும். தங்களுக்கு கிடைத்த உணவினை பகிர்ந்து உண்டு கொண்டாடுவதே இந்த நன்னாளின் தனிச்சிறப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.
தியாகத்திற்கு தயாராக இருப்போம் - சரத்குமார்
சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய பெரு மக்கள் பக்ரீத் திருநாளை தியாகத் திருநாளாகக் கடைப் பிடிக்கிறார்கள். இறை நம்பிக்கை, இறை அச்சம் இரண்டும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும்.
அத்தத்துவங்களை நிலைநாட்ட எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருப்போம் என்று அறிவிப்பதே தியாகத் திருநாளின் சீரிய நோக்கம்.
இத்தியாகத் திருநாளில் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிரந்தரமாக மனித இனத்திற்கு கிடைக்க வேண்டும் என்கின்ற பிரார்த்தனையை, உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்.
ஹஜ் கடமையை நிறைவேற்றி, தியாகத்தின் மகிமையை உணர்த்தும் வண்ணம், தூய்øயான உள்ளத்துடன் தியாகத் திருநாளை கடைப்பிடிக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.