ரூ. 34க்கு பெட்ரோல் வழங்க வைகோ கோரிக்கை
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 34க்கும், டீசல் ரூ. 22க்கும், காஸ் சிலிண்டர் ரூ. 183க்கும் வழங்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலையை இரண்டு ரூபாயும் குறைத்து விட்டதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, மக்களை ஏமாற்றுகின்ற மாய்மால அறிக்கையாகும்.
கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்த்திய போது, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 40.71 டாலராக இருந்தது. 2008ம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 123 டாலராக உயர்த்தப்பட்ட போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. ஐந்தும், டீசல் விலை ரூ. மூன்றும், எல்.பி.ஜி., விலையை சிலிண்டருக்கு ரூ.50ம் மத்திய அரசு உயர்த்தியது.
ஆனால், தற்போது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2004ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, ஒரு பேரல் 41.53 டாலராக சரிந்து விட்டது. இருப்பினும், கடந்த 2008ம் ஆண்டு ஜூனில் அதிகரித்த விலையை மட்டும் மத்திய அரசு குறைத்துள்ளது.
கச்சா எண்ணைய் விலை கடுமையாக குறைந்துள்ள போதும், மக்களின் சிரமங்களைப் போக்க முன்வராமல் ஒரு கண் துடைப்பு வேலையாக பெட்ரோல், டீசல் விலையை பெயரளவில் அரசு குறைத்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இப்போதாவது விலை குறையும் என்று எதிர்பார்த்த தாய்மார்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே, மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு நவம்பரில் இருந்த விலை நிலவரப்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.33.70, டீசல் ரூ.21.73, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.183 என நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே விலைவாசி குறையுமே தவிர, வேறு எந்த அறிவிப்பும் மக்களுக்கு ஒரு துளி அளவிற்கும் பலன் அளிக்காது என்று கூறியுள்ளார் வைகோ.