தீவிரவாத 'தொழிற்சாலையில்' பிறந்து, வளர்ந்த கஸாவ்!
இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் அப்சர்வர் இதழில் வெளியாகியுள்ள செய்தி...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓகாரா மாவட்டத்தில்தான் கஸாவ் பிறந்த பரீத்கோட் கிராமம் உள்ளது.
கஸாவின் தந்தை பெயர் முகம்மது அமீர், தாயார் பெயர் நூர்.
இந்தத் தகவல்கள் கஸாவ் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது. இதை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த வாரம் பரீத்கோட் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பரீத்கோட் கிராமத்தில் மொத்தம் 478 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் முகம்மது அமீர், நூர் இலாஹி ஆகிய தம்பதிகளின் பெயரை பாகிஸ்தான் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் அடையாள அட்டை எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று அதிகாரிகள் விசாரித்தபோது அங்கிருந்தவர் தனது பெயர் முகம்மது அமீர் என்றும், ஆனால் தான் அஜ்மலின் மாமனார் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிகாரிகளுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அஜ்மல் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் என்பது உறுதியாகி விட்டது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில், இந்தக் கிராமம் தீவரவாதிகளின் சொர்க்க பூமியாகும். இங்குதான் லஷ்கர் இ தொய்பா அமைப்பினருக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். இங்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மும்பையி்ல் பிடிபட்டுள்ள பையனும் (அஜ்மல்) இந்த ஊரைச் சேர்ந்தவன்தான்.
மும்பையில் தாக்குதல் நடந்த உடனேயே இங்கு தகவல் வந்து விட்டது. எங்களது இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள், ஜிஹாத் செய்ய வருமாறு கூறி மூளைச் சலவை செய்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலரே அதைச் செய்கின்றனர். ஆனால் இது தவறு என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர் என்றார் அவர்.