தாவூத் உள்ளிட்டோரை ஒப்படைக்க முடியாது - பாக். மறுப்பு
இஸ்லாமாபாத்: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் பிராந்தியம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இந்தியா கூறுவதை நிராகரிக்கிறோம் தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோரை ஒப்படைக்க முடியாது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கூட்டு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியா தெரிவித்திருந்த புகாருக்கு (De Marche) பதிலளித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரிடம், பாகிஸ்தான் அரசு தனது பதிலை வழங்கியுள்ளது.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 29ம் தேதி இந்தியா தனது முதல் எதிர்ப்பை இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது. அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் மும்பை சம்பவத்தில் தொடர்பு கொண்டிருப்பதாகவும்,. அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் அரசு, விசாரணையில் இந்திய அரசுக்கு உதவத் தயார் என அறிவித்திருந்தது. அதேசமயம், தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறியிரு்நதது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது 2வது எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா. அப்போது தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரியிருந்தது.
இதற்குத்தான் நேற்று பாகிஸ்தான் பதிலளித்துள்ளது. வெளியுறவுச் செயலாளர் சல்மான் பஷீர், இந்தியத் துணைத் தூதர் சத்யபிரதா பால்-ஐ தனது அலுவலகத்திற்கு வரவழைத்து இந்தப் பதிலை அளித்தார்.
அப்போது, மும்பைத் தாக்குதல் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா வழங்கினால், அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்திருப்பவர்கள் மீது இங்கேயே அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், மெளலானா மசூத் அஸார் போன்றோரை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது. அதற்கான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே இல்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களாக குற்றம் சாட்டப்பட்டால் அவர்கள் மீது பாகிஸ்தானில்தான், பாகிஸ்தானிய சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எக்காரணம் கொண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கவும், மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் உதவும், பாகிஸ்தானிலிருந்து விரைவில் உயர் மட்டக் குழு ஒன்று இந்தியா செல்லவுள்ளது.
மும்பை தாக்குதல் தொடர்பான வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் தனது தனிப்பட்ட விசாரணையை ஏற்கனவே முடுக்கி விட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை செயலாளர் பஷீர், இந்தியத் துணைத் தூதரிடம் தெரிவித்தார்.