பாக் நடவடிக்கையால் பாதிப்பில்லை என்கிறது லஷ்கர்-தீவிரவாதிகள் கைது கண் துடைப்பா?
இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெருக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வேட்டையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. முஸாபரபாத்தில் நடத்திய வேட்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல் தலைவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 20 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல நேற்று ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவரான மெளலானா மசூத் அஸார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது காஷ்மீர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகரில் போய் இந்திய அரசால் இறக்கிவிடப்பட்டவர்.
இதில் லக்வி மற்றும் அஸாரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது. ஆனால் இருவரையும் ஒப்படைக்க முடியாது. வலுவான ஆதாரங்களை இந்தியாவும், அமெரிக்காவும் முதலில் காட்டட்டும். தேவைப்பட்டால் இங்கு வந்து இவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி தருவோம் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்த கைது நடவடிக்கையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று லஷ்கர் இ தொய்பா கூறியுள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எங்களது செயல்பாடுகளை இந்த கைது நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது.
எங்களது பலம் அசாத்தியமானது. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.
திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
இவர் சொல்வதையும், பாகிஸ்தான் அரசு கூறிவதையும் வைத்துப் பார்க்கும்போது, தீவிரவாதிகளை வேட்டையாடுவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சர்வதேச நெருக்குதல், குறிப்பாக அமெரிக்காவுக்கு பயந்து இந்த கண்துடைப்பு கைது நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.













Click it and Unblock the Notifications