ஜெயலலிதா தமிழரல்ல-கருணாநிதி மறைமுக தாக்கு

அண்ணா அறிவாலயத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில்,
ஜாதி-மதம் கடந்து இந்த காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு நல்வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்.
இங்கே திருமாவளவன் பேசும்போது அடிக்கடி நாம் தமிழர் என்ற வார்த்தையை உபயோகித்தார். அப்போது மறைந்த சி.பா.ஆதித்தனார் நினைவுதான் எனக்கு வந்தது. இப்போது நாம் தமிழர் என்பதை உணர்ந்து கொள்கிறோமா என்ற கேள்விக்கான பதிலை உங்களிடம் இருந்து தான் நான் எதிர்பார்க்கிறேன்.
யார் யாரையோ நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு நாம் தமிழர் என்று பேசுவதில் பொருள் இருக்க முடியுமா? இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா இங்குள்ள தமிழர் தலைவர்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்துள்ளார். அதை கண்டிக்கும் வகையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் வரலாற்று ரீதியான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. வடநாட்டைச் சேர்ந்த கனக விசயன் என்ற மன்னர் பரம்பரையினர் தமிழக மன்னர்களை இழிவுபடுத்தினார்கள். இதனால் ஆத்திரம் கொண்ட சேரன் செங்குட்டுவன் ஆர்ப்பரித்து எழுந்து போர் தொடுத்து, இமயம் வரை சென்று அவர்களை தோற்கடித்து, அவர்கள் தலையிலே கல் சுமக்க செய்து தென்புலத்திற்கு கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை எழுப்பினான்.
சில பேர், சோழனுக்கும், பாண்டியனுக்கும் இல்லாத ஆத்திரம் சேரனுக்கு ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த சேரன், நான் மன்னனாக இருந்தாலும் தமிழன். வடபுலத்து மன்னர்கள் தமிழர்களை இழிவாக பேசியதால் நான் ஆத்திரப்பட்டதில் நியாயம் உண்டு என்றான்.
பொன்சேகா ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே தமிழக தலைவர்களை கோமாளிகள் என்று அடாவடித்தனமாக பேசி இருக்கிறார். சில தமிழக தலைவர்கள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெறுகிறார்கள். அவர்களை அழித்து விட்டால் பணம் கிடைக்காது என்பதால் தான் புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று பொன்சேகா கூறியிருக்கிறார்.
இதைக் கேட்ட தமிழக தலைவர்கள் ஆத்திரத்துடன் தங்கள் கண்டனங்களை வெளியிட்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் இப்படி கண்டனம் தெரிவித்தார்கள் என்ற பெயர் பட்டியல் வெளி வந்துள்ளது. ராமதாஸ், வைகோ, கருணாநிதி, திருமாவளவன், வரதராஜன், தா.பாண்டியன் ஆகியோர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த பட்டியலில் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் பெயர் (ஜெயலலிதா) ஏன் இல்லை என்பதை திருமாவளவன் போன்றவர்கள் யோசிக்க வேண்டும். நாம் தமிழர் என்ற உணர்வு இருந்திருந்தால் அந்த பெயர் இடம் பெற்றிருக்கும்.
அவர் தமிழர் அல்லாதவர் என்பதால் தான் அவருடைய பெயர் இல்லை என்ற உண்மையை, ரகசியத்தை, அந்த சூட்சமத்தை தமிழர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் நாம் தமிழர் என்ற உணர்வோடு இருந்து நம்முடைய கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை தான் இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது. இந்த கருத்தை சொல்வதற்கு அமைச்சர் பெரியசாமி இல்லத் திருமணம் பயன்பட்டதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி கே.வி.கே.சாமி முதல் பல சாமிக்கள் திமுகவில் இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் விட ஒரு படி மேலே இருப்பவர் பெரியசாமி. ஆட்சியில் இல்லாதபோதும் கட்சியின் வளர்ச்சிக்காக துணை நின்றவர் அவர் என்றார் கருணாநிதி.
இலங்கை தூதரகம் முன் வைகோ ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே பொன்சேகாவின் பேச்சை கண்டித்து மதிமுக சார்பில் இன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோட்டில் உள்ள இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம், எழுத்தாளர் தியாகு உள்பட பலர் பேசினர்.
இதனால் அப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications