தூத்துக்குடி-மும்பையில் பலியான என்ஜீனியர் உடல் அடக்கம்
தூத்துக்குடி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியான தூத்துக்குடி மாவட்ட என்ஜீனியரின் உடல் அடக்கம் புதியம்புத்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயக்குமார். மதுரை ரயில்வே எக்ஞ்சேஞ்சில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23ம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கு சுற்றுலா சென்றார்.
26ம் தேதி காலை மும்பையிலிருந்து தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மும்பை தினகரன் நாளிதழில் படத்துடன் காணவில்லை என விளம்பரம் செய்தனர்.
இந்த விளம்பரத்தை பார்த்த மும்பை காவல்துறையினர் புதியம்புத்தூரில் உள்ள அவரது சகோதரர் செல்வினை தொடர்பு கொண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயக்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி அறிந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஜெயக்குமாரின் உடலை உரிய முறையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
உறவினர்கள் செல்வின், தேவக்குமார் ஆகியோர் மும்பை சென்று ஜெயக்குமாரின் உடலை பெற்று விமானம் மூலம் மதுரை எடுத்து வந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதியம்புத்தூருக்கு கொண்டு வந்தனர்.
அங்கு உடலுக்கு தாசில்தார் தமிழ்மணி, மதுரை கோட்ட தொலைதொடர்பு அதிகாரி வீராபாகு உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயக்குமாரின் உடல் புதியம்புத்தூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications