வெள்ள நிவாரணம்-கிராம நிர்வாக அதிகாரி சிறைவைப்பு!
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வெள்ள நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியை பொது மக்கள் சிறை வைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளக்காடானது. கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் அருகில் உள்ள கிழக்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி முருகையா பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத பொது மக்கள் சிலர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப் பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியை அவரது அலுவலகத்திற்குளே வைத்து பூட்டு போட்டு பூட்டினர். இதனால் அவர் சில மணி நேரம் வெளியே வரமுடியாமல் தவித்தார்.
தன்னை கிராம மக்கள் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய விவரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது செல் போன் மூலம் தெரிவித்தார்.
அதன் பேரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் குணசேகரன், மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முருகையாவை மீட்டனர்.












Click it and Unblock the Notifications