தீவிரவாதி கஸாவ் போலீஸ் காவல் நீட்டிப்பு
மும்பை: மும்பை தாக்குதலில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட தீவிரவாத அஜ்மல் அமீர் கஸாவின் போலீஸ் காவல் டிசம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஸாப்பின் காவலை நீட்டிப்பதற்காக மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்திற்கே நீதிபதி வந்து காவலை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார்.
கஸாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், அவன் மிக மிக முக்கியமான சாட்சியம் என்பதாலும், கஸாப்பை கோர்ட்டுக்கு கொண்டு வருவதில் ரிஸ்க் உள்ளதால், நீதிபதியை குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து காவலை நீட்டிக்குமாறு மும்பை குற்றப் பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, குற்றப் பிரிவு அலுவலகத்திற்கே வந்து கஸாவின் காவலை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார்
மும்பை போலீஸ் மற்றும் அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ள கஸாவ் மீது கொலை, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 27ம் தேதி கஸாவ் போலீஸாரால் பிடிக்கப்பட்டான். அது முதல் அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது மேலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கஸாவிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. அப்போது தீவிரவாதத் தாக்குதல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications