பாலு மீதான அதிமுக வழக்கு: ஜெயா, டைம்ஸ் நவ் டிவிக்கு நோட்டீஸ்
டெல்லி: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவதூறாகப் பேசியது தொடர்பான வீடியோ டேப்கள் மற்றும் மைக்ரோ சிப்களை தாக்கல் செய்யுமாறு ஜெயா டிவி மற்றும் டைம்ஸ் நவ் டிவி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி ஆளும் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அத்தியாவசிய சேவை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தும் நிபந்தனையுடன் தி.மு.க. கூட்டணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், முழு அடைப்புக்கு நிகராக நடத்தப்பட்ட போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றும், இந்த போராட்டத்தையொட்டி சென்னையில் உண்ணாவிரத மேடையில் பேசிய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நீதிபதிகளையும், அவர்களது அதிகாரத்தையும் விமர்சித்துப் பேசியதாக அ.தி.மு.க சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவித்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகர்வால், சிங்க்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர், போக்குவரத்துச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் தெரிவித்த பதிலை ஏற்றுக் கொண்டனர்.
எனினும் நீதிபதிகள் பற்றி விமர்சித்துப் பேசியதாக கூறப்படும் டி.ஆர்.பாலுவின் பேச்சை தீவிர கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக பாலுவின் பேச்சு அடங்கிய வீடியோ டேப்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இரு சானல்களையும் சேர்ந்த செய்தியாளர்கள், வீடியோ மற்றும் புகைப்படக்காரர்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது அதிமுக சார்பில் ஆஜரான வக்கீல் குரு கிருஷ்ணமூர்த்தி, நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் வகையில் நடத்தப்பட்ட தி.மு.க. கூட்டணியின் போராட்டம் தொடர்பான ஆதாரங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், நீதிபதிகளை விமர்சிக்கும் விதத்தில் டி.ஆர்.பாலு பேசியதை ஜெயா டி.வி., டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகள் பதிவு செய்த வீடியோ கேசட்டுகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
அவர் வாதிடுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் ஆதாரமாக கூறப்படும் வீடியோ ஒளிநாடாக்கள், அ.தி.மு.க.வுக்கு சார்பான இரண்டு தனியார் தொலைக் காட்சிகளுக்கு உரியவை என்பதால் அவற்றை ஏற்கக் கூடாது.
இந்த வழக்கில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் சேர்க்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக வழக்கு தொடரும் முன்பு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அல்லது அட்டர்னி ஜெனரலின் அனுமதியை எதிர்தரப்பினர் கோரவில்லை. ஆகவே அடிப்படையிலேயே இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கவேண்டும் என்றார்.
ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தொலைக்காட்சி நிறுவனங்கள் அ.தி.மு.க.வுக்கு சார்பாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரின் பேச்சு எப்படி அமைந்துள்ளது என்பதை தீர்மானிக்கும் உரிமை நீதித் துறைக்கு உண்டு.
ஜெயா டி.வி. மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபர், ஒளிப்பதிவாளர் மற்றும் அந்த செய்தியை ஒளிபரப்பிய இரண்டு நிறுவனங்களின் உறைவிட அதிகாரிகள் அனைவரும், வெட்டப்படாத வீடியோ காட்சிகள் அடங்கிய ஒளிநாடாக்களையும் (வீடியோ கேசட்), மைக்ரோ சிப்புகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் ஜனவரி 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.