தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே கூட்டணி பேச்சு-விஜய்காந்த்
விருத்தாசலம்: தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது நான் நானாகவே இருக்கிறேன்.
தனது தொகுதியான விருத்தாசலத்திற்கு வருகை தந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மழையால் வீடு இடிந்து விழுந்து பலியானான சத்யா குடும்பத்திற்கு ரூ 50,000 வழங்கினார். பின்னர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டமும், வாஜ்பாய் கொண்டு வந்த இந்தியாவை இணைக்கக்கூடிய தங்க நாற்கர சாலையும் பெயர் சொல்லும்படியாக இருந்தன. ஆனால், இப்போது மத்திய-மாநில அரசுகளிடம் குறிப்பிடும்படியாக திட்டங்கள் இல்லை.
இந்தியாவில் நதிகளை இணைக்க ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதம் மிக அதிகமாக உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்திற்கு அரசு வழங்கியுள்ள வெள்ள நிவாரணம் போதாது.
இந்த நிவாரணம் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கூடுதலாக வெள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும்.
விலைவாசி விண்ணுக்கு உயர்ந்து விட்டது. வெங்காயம் கிலோ 35க்கும், தக்காளி கிலோ 45க்கும் விற்கிறது. இப்படி விலைவாசி உயர்ந்தால் ஏழைகள் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு அரசு அதிக சலுகைகள் வழங்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியம் நாட்டில் உள்ள வறுமையை எப்படி ஒழிக்க வேண்டும் என்று வழி கண்டுபிடித்து உடனடி தீர்வு காண வேண்டும்.
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது நான் நானாகவே இருக்கிறேன் என்றார்.
இதன்மூலம் கூட்டணிக்கு அவர் தயாராவதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications