சென்னையில் இலவச செயற்கைக் கால்கள் பெற..
சென்னை: கால்களை இழந்து தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காரியத்தில் இறங்கியுள்ளன இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி மற்றும் டவ் இந்தியா ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக ஜெய்ப்பூர் செயற்கை கால்களை வழங்குகிறார்கள். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை இதற்கான முகாம் சென்னையில் நடக்கிறது.
சென்னை சூளையில் உள்ள ஹஸ்தினாபூர் நகரி (மாலு ஜெய்ன் பவன்) மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கால்களை இழந்த, செயற்கை கால் உதவி தேவைப்படுவோர் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு வரலாம். இதற்கு எந்த அமைப்பையும் அணுக வேண்டிய அவசியமில்லை.
மேலும் விவரங்களுக்கு: மோகன் ஜெயினை 044 - 26691616, 25322223 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம்: www.jaipurfoot.org
முகவரி: ஹஸ்தினாபூர் நகரி (மாலு ஜெய்ன் பவன்),
எண்-30 வெங்கடாச்சல முதலியார் தெரு,
சூளை,
சென்னை- 600112